வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டெல்டா விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
தஞ்சாவூர்: காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் விடிய விடிய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சாலையில் சமைத்துச் சாப்பிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர் முற்றுகையிடும் போராட்டம நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து தமிழக விவசாய சங்கத்தினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர் விவசாய சங்கத்தினர் ரோட்டில் அமர்ந்து முற்றுகையிட்டனர். நேற்று இரவு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அவர்கள் ரோட்டில் அடுப்பு அமைத்து சமையல் செய்து சாப்பிட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
திருவாரூர் கலெக்டர் அருலுவலகம் முன்பும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் லாசர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
மயிலாடுதுறையில், போராட்டக்குழுவினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கச்சேரி சாலையில் கஞ்சி தொட்டி அமைத்து கஞ்சி தயாரித்து சாப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications