2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்- வானிலை மையம்
புதுக்கோட்டை: பருவம் தவறி தற்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவ மழைக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் குறிப்பாகதென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை முதலே புதுக்கோட்டை பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நகரை சுற்றியுள்ள காய்ந்து கிடந்த குளங்களில் தண்ணீர் பெருகுகிறது. ரோட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பல நாட்களுக்கு பின்னர் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். இதுபோன்று தொடர்ந்து மழை பெய்தால், கருகும் நிலையில் உள்ள பயிர்கள் தப்பும் என்பதால், தொடர்ந்து மழை பெய்யுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதேபோல் கீரமங்கலம், ஆலங்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.
கடல் கொந்தளிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டிணம், ஜெகதாபட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடல் சீற்றமாக காணப்பட்டது. வழக்கத்தை விட கடல் அலைகள் உயரமாக எழுந்து வந்தன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. 700-க்கும் மேற்பட்ட விசை படகுகளும், 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
2 நாட்களுக்கு மழை பெய்யும்
இதற்கிடையே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடருவதால், தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை சற்று தமிழகம்நோக்கி நகர்ந்துவந்திருந்தால் தமிழகத்திற்கு அதிக மழையை கொடுத்திருக்கும். ஆனால் அந்த தாழ்வு நிலை அங்கேயே உள்ளது. மேலும் குமரிக்கடல் மேல் வானத்தில் சுழற்சி உள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புண்டு. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்றார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 17 செமீ மழை பெய்துள்ளது. முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டையில் 5 செ.மீ. மழையும், புதுக்கோட்டை தேவகோட்டை, திருத்துறைப்பூண்டி, ராமேசுவரத்தில் 3 செ.மீ. மழையும், ஒரத்தநாடு, காரைக்காலில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications