மேற்கு வங்கத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம்: ஆளுநர் எம்.கே. நாராயணன் காட்டம்
இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடைபெற்று வரும் வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது. வன்முறைகள் என்பது அரசியல் கலாச்சாரம் அல்ல.. இது குண்டாயிசமாக உருவெடுத்திருக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று சாடியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநரின் அறிக்கையை இடதுசாரிகள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் எச்சரிக்கை இது. மாநில அரசு தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்
மேற்கு வங்கத்தில் கடந்த சில வாரங்களாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் வன்முறையைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். காங்கிரஸ் கட்சியும் இதேபோல் கண்டனப் பேரணியை நடத்த உள்ளது. இந்நிலையில் ஆளுநரின் காட்டமான அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.