வடகிழக்குப் பருவ மழை ஓய்ந்தது... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரமணன்
சென்னை: வட கிழக்குப் பருவ மழைக்காலம் முடிந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த சீசனில் 16 சதவீத அளவுக்கு மழை பற்றாக்குறை காணப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த பருவ மழை குறித்த கருத்தரங்கில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ரமணனிடம் மாணவர்கள் பலர் பருவ மழை குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்கு ரமணன் விளக்கமாக பதிலளித்தார். அப்போது வட கிழக்குப் பருவமழைக்காலம் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

2 பருவ மழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை ஆகிய 2 கால கட்டங்களில் அதிக மழை பெய்யும். இதில் தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் அதிக மழை கிடைக்கும்.

காவிரி டெல்டாவில் நல்ல மழை
திருச்சி, தஞ்சை, நாகை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் வட கிழக்கு பருவ மழையில் தான் அதிகமாக மழை பெய்து வந்தது.

பல மாவட்டங்களில் குறைந்த மழை
ஆனால் பருவ மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு குறைவான மழை தான் பெய்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வங்க கடலில் கடந்த 12-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றது. பின்னர் இது வலுவிழந்து வடக்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம் மற்றும் தென் ஆந்திர கடல் பகுதியில் நிலை கொண்டது.

பொழப்பைக் கெடுத்த போபா புயல்
அப்போது தமிழக கடல் பகுதியில் ஈரப்பதத்தை உறிஞ்சியது. இதன் காரணமாக தமிழகத்தில் குறைவான மழை பெய்தது. கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் குளிர் காற்று வீசியது. மேலும் தென் சீன கடலில் உருவான போபா புயல் தமிழக கடல் பகுதியில் இருந்த ஈரப்பதத்தை உறிஞ்சியது. இந்த புயல் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

திசை மாறி இலங்கைக்குப் போனதால் வந்த வினை
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தாழ்வு பகுதிகள், தென் திசை நோக்கி தென் இலங்கை கடற்பகுதிக்கு சென்று விட்டன. இதனால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

இனி வெப்பச்சலனம் மட்டுமே
வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான நிலம் புயல் அக்டோபர் இறுதியிலும் டிசம்பர் தொடக்கத்திலும் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகள் மூலமே தமிழகம் ஓரளவு மழையை பெற்றது. இடைப்பட்ட மற்ற நாட்களில் மழை இல்லை. தற்போது வடகிழக்கு பருவ மழையும் நேற்றுடன் முடிந்துவிட்டது. இனி வெப்ப சலனம் காரணமாகத்தான் மழை பெய்யும்.

16 சதவீத மழை குறைவு
அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தமிழகத்தில் 16 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. இந்த கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 442 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 372 மி.மீ. மழையே பெய்துள்ளது. இது 16 சதவீதம் குறைவாகும். இதேபோல் கேரளாவில் 35 சதவீதமும், ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் 2 சதவீதமும், தெற்கு கர்நாடகத்தில் 23 சதவீதமும் குறைவான மழையே பெய்துள்ளது.

ஆந்திராவில் அதிகம்
அதே சமயம் கடலோர ஆந்திராவில் 33 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. அங்கு சராசரியாக 327 மி.மீ. மழை பெய்யும். ஆனால் 435 மி.மீ. மழை பெய்துள்ளது. கடலோர ஆந்திர மாநிலத்தில் கூடுதல் மழை பெய்ததற்கு வங்க கடலில் உருவான சில காற்றழுத்த தாழ்வு நிலைகள் ஆந்திரம் நோக்கி நகர்ந்து சென்றதே காரணம்.

அக்டோபரில் ஓ.கே... நவ, டிசம்பரில்தான் மோசம்
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் மட்டும் 43 சதவீதம் கூடுதல் மழை கிடைத்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 54 சதவீதம் மற்றும் 62 சதவீதம் குறைவான மழைதான் கிடைத்தது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications