உயிரை கையில் பிடித்திருக்கும் விவசாயிகளுக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ? கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையிலே உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தமிழகத்திலே உள்ள மருத்துவமனைகளிலேயே பெரிய மருத்துவமனை. அந்த மருத்துவமனைக்கு, மருந்துகளுக்கான நிதியினை அதிமுக அரசு கடந்த ஆண்டை விடக் குறைத்து விட்டதாமே?
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2,700 உள்நோயாளிகளும், 12,000 வெளிநோயாளிகளும் சிகிச்சைக்காக அன்றாடம் வருகிறார்கள். தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனையாக இது விளங்குகிறது.
கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது. 2011-2012ம் ஆண்டு, திமுகழக ஆட்சியில் மருந்துகளுக்காக இந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 7 கோடி ரூபாய். இந்த நிதியை கடந்த ஆண்டு 6 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டதாக செய்தி வெளியானது.
ஆயத் தீர்வையாக மட்டும் பல கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ள நிலையில், அதிமுக அரசு ஏழை, எளியோரின் நலன் காக்கும் இதுபோன்ற அத்தியாவசிய அடிப்படைச் செலவுகளைக் குறைக்காமல் இருப்பது நல்லது.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலையைப் பார்க்கச் சென்றுள்ள அமைச்சர்கள்-அதிகாரிகள் கொண்ட குழுவிடம், வறட்சி பாதித்த விளை நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி பகுதி நிவாரணமாக இல்லாமல், முழு நிவாரணத் தொகையாக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் மனுக் கொடுத்திருக்கிறார்களே?
பத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர்விட்ட பிறகுதான், விவசாயிகளே வெகுண்டெழுந்து வீதிக்கு வந்த பிறகுதான், அரசுக்கே யோசனை வந்து குழுவினை அறிவித்திருக்கிறார்கள்.
குழு எப்போது பயணம் செய்து முடிப்பது, எப்போது அறிக்கை தருவது, எப்போது அரசு நிவாரணம் தருவது என்று வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து தவிக்கும் விவசாயிகள் தங்கள் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு கண்ணீர்க் கடலிலே மூழ்கியிருக்கிறார்கள்.
ஆண்டு தோறும் குறுவைச் சாகுபடியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சம்பாப் பயிரும் நன்கு விளைந்து அறுவடை நடத்தி, உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விவசாயிகள், இந்த ஆண்டு வேதனைத் தீயில் மூழ்கி எங்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் ஏது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு - விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு, அவர்கள் குடும்பத்திலே ஒருவருக்கு அரசு வேலை - இவற்றை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயர் மட்டக் குழு தங்கள் ஆய்வை முடித்து விட்டு அளிக்கும் பரிந்துரைகளை யாரிடம் கொடுப்பார்களோ? விவசாயிகளுக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications