அயர்லாந்தில் பர்கரில் குதிரை இறைச்சி: 10 மில்லியன் பர்கர்கள் வாபஸ்

அயர்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த டெஸ்கோ மாட்டு இறைச்சி பர்கரை பரிசோதித்ததில் அதில் 29 சதவீதம் குதிரை இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெஸ்கோ இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பர்கர்கள் அனைத்தையும் வாபஸ் பெற்றது.
அதிகாரிகள் 27 பர்கர்களை சோதித்ததில் அதில் 10 பர்கர்களில் குதிரை இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மார்கெட் செயின்களான ஆல்டி, ஐஸ்லாந்து, லிடில் மற்றும் டெஸ்கோ மாட்டு இறைச்சி தயாரிப்புகளை வாபஸ் பெற்று வருகின்றன.
குதிரை இறைச்சி உள்ள பர்கர்களை திரும்பக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யார்க்ஷயரில் உள்ள டேல்பக், அயர்லாந்தில் உள்ள சில்வர்கிரெஸ்ட் புட்ஸ் மற்றும் லிபே மீட்ஸ் ஆகிய 3 இறைச்சி வினியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். டெஸ்கோ பர்கர்ஸ் சில்வர்கிரெஸ்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சில்வர்கிரெஸ்ட் புட்ஸ் மற்றும் டேல்பக் ஆகியவை ஏபிபி புட் குழுமத்தைச் சேர்ந்தது.
குதிரை இறைச்சி விஷயம் வெளியானதை அடுத்து கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்ட 10 மில்லியன் பர்கர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து ஒருவர் ட்விட்டரில் விளையாட்டாக கூறியிருப்பதாவது, ஷெர்கருக்கு என்ன ஆனது என்று தற்போது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தின் பிரபலமான ரேஸ் குதிரையான ஷெர்கர் கடந்த 1983ம் ஆண்டு திருடுபோனது.












Click it and Unblock the Notifications