டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு.. இனி விலை அடிக்கடி உயரும்!

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி,
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல் விலையை மாற்றி நிர்ணயிக்க மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது ஏற்படும் சந்தை விலை மாற்றத்துக்கு ஏற்ப டீசல் விலையை இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும். ஆனால், இந்த விலை ஏற்றமோ அல்லது இறக்கமோ மிக அதிக அளவில் இருக்காது.
இப்போது ஒரு லிட்டர் டீசல் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 9.60 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஒரேயடியாக விலையை உயர்த்தாமல், கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உடனடியாக டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்ற பெட்ரோலியத்துறையின் கோரிக்கை மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் மொய்லி.
இதன்மூலம் டீசல் விலை இனி கொஞ்சம் கொஞ்சமாக உயரப் போவது தெளிவாகிறது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் தந்தது. இதையடுத்து பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் லாரி போக்குவரத்தை நேரடியாக பாதித்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தவோ, அதிக அளவில் உயர்த்தவோ அனுமதிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
இதனால் மாதம் ஒருமுறையாவது டீசல் விலை உயரக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications