தெலுங்கானா தவிர்க்க முடியாதெனில் ராயலசீமாவும் தனி மாநிலமே! பரபரக்கும் ஆந்திரா!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்க இருக்கும் நிலையில் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை இம்மாதம் 28-ந் தேதிக்கு முன்னதாக மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. அப்படித் தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதைத் தடுக்கும் முயற்சியாக அதாவது ஐக்கிய ஆந்திரா தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக ஒருபுறம் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஹைதராபாத்தில் இன்று ராயலசீமா மற்றும் ஆந்திரா பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 10 அமைச்சர்கள், 26 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே தெலுங்கானா தனி மாநிலம் தவிர்க்க முடியாதது எனில் ராயலசீமா தனி மாநிலத்தையும் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராயலசீமா கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வரும் 20-ந் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டு லாபி செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ராயலசீமாவின் 3 பெரிய மாவட்டங்களைப் பிரித்தால் மொத்தம் 10 மாவட்டங்கள் வரும். இதுவே ஒரு தனி மாநிலத்துக்குப் போதுமானது என்கிறது ராயலசீமா கூட்டு நடவடிக்கைக் குழு!
தெலுங்கானா உருவானால் ராயலசீமாவும் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தால் ஆந்திர மாநிலம் 3 சிறு மாநிலங்களாக உடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்!












Click it and Unblock the Notifications