இடிந்தகரையில் பஞ்சாயத்து தலைவியை தாக்கிய போராட்டக்காரர்கள் மீது வழக்கு
கூடங்குளம்: இடிந்தகரையில் பஞ்சாயத்துதலைவி மற்றும் அவரது கணவரை தாக்கிய போராட்டக்குழுவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அருகே உள்ள கடற்கரை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இடிந்தகரையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இடிந்தகரை கிராமமானது விஜயாபதி கிராம பஞ்சாயத்தில் இருக்கிறது. இடிந்தகரையை சேர்ந்த எஜித்தின் என்பவர் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர் ஆரம்பத்தில் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து வந்தார். பின்னர் அணு உலைக்கு ஆதரவாக திருப்பினார். இதனால் பஞ்சாயத்து தலைவி எஜித்தினுக்கும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் கடந்த பல மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி இடிந்தகரை கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவுக்கு பஞ்சாயத்து தலைவி எஜித்தின், அவருடைய கணவர் சகாயராஜ் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
அதன் பேரில் அவர்கள் 2 பேரும் விழாவுக்கு சென்று இருந்தனர். விழா மேடையில் பஞ்சாயத்து தலைவியும், அவருடைய கணவரும் அமர்ந்து இருந்த போது, அணு உலை எதிர்ப்பாளர்கள் சிலர் கும்பலாக அங்கே வந்து தகறாறு செய்ததாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றியதால் பஞ்சாயத்து தலைவி எஜித்தின், அவருடைய கணவர் சகாயராஜை அந்த கும்பல் தாக்கியதாகவும், விழாவில் இருந்து 2 பேரும் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பஞ்சாயத்து தலைவி எஜித்தின், அவருடைய கணவரை தாக்கியது தொடர்பாக போராட்டக்குழு முக்கிய பிரதிநிதிகளான மில்டன், கெபிஸ்டன் ஆகியோர் உள்பட போராட்ட குழுவைச் சேர்ந்த 10 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டக்குழுவினர் சிலர் எஜித்தின் கணவர், சகோதரர் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications