ஐ.டி. நிறுவனங்களில் அத்துமீறல்… பெங்களூரில் ஒரு நாளைக்கு 2 பாலியல் புகார்கள்!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 பாலியல் புகார்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியவில் டெல்லிக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நகரமாக பெங்களூர் மாறி வருகிறது என்றும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது ஆய்வு முடிவு ஒன்று.
சிலிக்கன் வேலி நகரம் எனப்படும் பெங்களூர்... இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையின் சொர்க்க பூமி. ஆனால் அங்குதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என்பது பலர் அறிந்திராதது மட்டுமல்ல, அதிர்ச்சியான விஷயம். இதில் பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் விகிதம் 17 சதவீதம் என்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய அரசே ஒரு சட்டத்தை இயற்றி பாதுகாக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

பாலியல் தொல்லைகள் எவை
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை தேவையின்றி தொட்டு பேசுவது, ஆபாச வார்த்தைகளால் புகழ்வது, கண்டிப்பது, பிடிக்காத பெண்களின் உடல் பாவனைகளை கார்டூன் வரைபடம் போட்டு வெளிப்படுத்துவது, பெண்களின் நிறத்தை கூறி வர்ணிப்பது அல்லது விமர்சிப்பது, தங்கள் சுயதேவையை பூர்த்தி செய்ய வற்புறுத்துவது இவை எல்லாம் பாலியல் தொல்லைகள்.

உடல்ரீதியான தொல்லைகள்
சமீபத்தில் ஆக்ஸ்பார்ம் என்ற நிறுவனம் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து டில்லி, மும்பை, பெங்களூர், சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் 400 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. பாலியல் தொல்லை தொடர்பாக 121 புகார்கள் எழுந்தன. இதில் 19 சம்பவங்களில் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது.

மனரீதியான தொல்லைகள்
102 சம்பவங்களில் மனரீதியான பாலியல் தொல்லைகள் தரப்பட்டுள்ளது. இதில் சிறு நிறுவனங்களில் மட்டும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் தொல்லை நடப்பது குறித்து 16 சதவீதத்தினர் புகார் கூறியுள்ளனர். வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களில் 20 சதவீதத்தினர் தனி ஆளாக வேலை பார்த்து ஒட்டு மொத்த குடும்பத்தையே வழிநடத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இதனால் புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

700 பாலியல் புகார்கள்
கடந்தாண்டில் கர்நாடக அரசின் தொழிலாளர் துறைக்கு மட்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் நடப்பது குறித்து 700 புகார் வந்துள்ளன. இதில் 60 சதவீத புகார்களில் நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆனால் புகார் தரும் பெண்கள் குறித்த விவரங்கள் இல்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.நிறுவனங்களுக்கு விலக்கு
என்ன தான் புகார் வந்தாலும் தொழிலாளர் துறை ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஏனெனில் அங்கு தொழிலாளர் நல சட்டங்கள் அமல்படுத்துவதில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்படும் இலக்குகள்
சென்னை, ஐதராபாத், கோவை போன்ற இடங்களில் செயல்படும் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் பணிபுரியும் பெண்களுக்கான தொல்லைகள் இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சின்ன, சின்ன விஷயங்களை காரணம் காட்டி பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடங்குகிறது. இதை சமாளித்து வெற்றி கொள்பவர்கள் பலர் இருந்தாலும்; சில இளம் பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணியை தொடரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பலியாகும் கொடூரம்
மற்ற உற்பத்தி சார் நிறுவனங்களை போல் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் டார்கெட் நிர்ணயம் செய்து தான் வேலை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் இலக்கை எட்டாவிட்டால் பணியில் தொடர்வது என்பது எளிதான காரியமல்ல. இதற்காக உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பாலியல் ஆசைகளுக்கு தங்களை பலி கொடுக்கவேண்டிய நெருக்கடிக்கு பெண்கள் ஆளாகின்றனர். இதை ஏற்றுக்கொண்டால் பணியில் தொடரமுடியும். அதேபோல் இலக்கை எட்டுவதிலும் தாராளம் காட்டப்படும். இல்லாவிட்டால் வார்த்தைகளில் அதன் தாக்கம் வெளிப்படும்.

மனித உரிமை மீறல்
பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை ஒரு குற்றமாக மட்டுமில்லாமல் மனித உரிமை மீறலாகவும் பார்க்கவேண்டும், என்று ஆய்வினை மேற்கொண்ட ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிசா அகர்வால் கூறியுள்ளார்.

குமுறிய பெண்கள்
டில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானபோது, சென்னை, பெங்களூர், கோவை போன்ற இடங்களில் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் சாலையில் இறங்கி போராடினார்கள். டில்லிக்கு அடுத்தபடியாக பெங்களூரில் தான் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன. வழக்கமாக நிறுவனமே கதி என கிடக்கும் ஐ.டி.நிறுவன பெண் ஊழியர்கள் சாலையில் இறங்கி இவ்வளவு தூரம் போராடியதற்கு காரணம் மீடியா தாக்கமல்ல. தங்கள் நிறுவனங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளின் வெளிப்பாடு தான்.












Click it and Unblock the Notifications