பால் தாக்கரே பிறந்தநாள்: பெண்களுக்கு ‘கத்தி’ வழங்கும் சிவசேனா
மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரே பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி அந்த விழாவில் பங்கேற்க வரும் பெண்களுக்கு கத்தி வழங்க சிவசேனா கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி காலமானார். அவரது 87வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாட மும்பையில் உள்ள சிவசேனா தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும் பெண்களுக்கு கத்தியை பரிசாக அளிக்க தெற்கு மும்பை சிவசேனா அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தெற்கு மும்பை விழாக்களில் பங்கேற்கும் பெண்களுக்கு கத்தி வழங்க முடிவு செய்திருப்பதாக அப்பகுதி சிவசேனா தலைவர் அஜய் சவுத்ரி கூறியுள்ளார். 'பெண்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது. அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக நாங்கள் கத்தியை இலவசமாக வழங்குகின்றோம். தற்காப்புக்காக கத்தியை உபயோகிக்கும் பெண்கள் மீது போடப்படும் வழக்குகளை சிவசேனா கவனித்துக்கொள்ளும்' என்று அவர் மேலும் கூறினார்.
பெண்களுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கை பர்ஸ்களுக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய அளவிலான மடக்கு கத்திகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச கத்தி வழங்கும் திட்டம் மும்பையின் மேலும் பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என சிவசேனா தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து சிவசேனா சார்பில் ஏற்கனவே பெண்களுக்கான அவசர தொலைபேசி உதவி சேவை மையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்புக்காக கத்தி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications