உ.பி.யில் சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த நீதிபதி…. கோர்ட்டை புறக்கணித்த வக்கீல்கள்
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் நீதிபதி ஒருவரே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் சில்மிஷம் செய்த நீதிபதியை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.
உ.பி. மாநிலம் கோண்டா மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார் என்பது குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நீதிபதி மீதான புகார் என்பதால், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
பாலியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீதிபதியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நேற்று கோண்டா கோர்ட்டை புறக்கணித்தனர். அத்துடன் நீதிபதியின் அறையையும் அடித்து நொறுக்கினர்.
அதேநாளில், 21 வயதான மற்றொரு பெண்ணையும் அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் தரப்பில் போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
பெண்கள் தனியாகச் சென்றால் தொல்லை, பள்ளிக்குச் சென்றால் தொல்லை, வேலைக்குச் சென்றால் தொல்லை... என எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய குற்றங்களுக்கு நீதி வழங்கக் கூடிய நீதிமன்றத்தில் கூட பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்பதற்கு உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவமே சாட்சியாக உள்ளது.












Click it and Unblock the Notifications