ஈழப் போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக செஞ்சோலை சிறார் இல்லம் மீண்டும் திறப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கு முன்னர் பொறுப்பாளராக இருந்தவரும், வடக்கு-கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின்(நெர்டோ) தலைவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இந்த இல்லத்தை திறந்து வைத்தார்.
போரின் பின்னர் இலங்கை படையினரின் பெரிய முகாமாக செயல்பட்டு வந்த செஞ்சோலை இல்லத்தினை மீண்டும் இயங்க வைப்பதற்காக படையினருக்கும் நெர்டோ அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து இந்த இல்லம் அமைந்திருந்த நிலத்தை விடுவிப்பதற்கு படைத் தரப்பு சம்மதித்தது.
இந்நிலையில் புலம்பெயர் தமிழ் உறவுகளின் உதவியுடன் நெர்டோ அமைப்பினரால் அந்த இல்லம் புனரமைக்கப்பட்டு, அதன் தலைவரான குமரன் பத்மநாதனால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்ட ஆட்சித் தலைவர்) திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட படைத் தளபதி உதய பெரேரா, வடமாகாண சிறார் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி, கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்த்தேக்கமான இரணைமடுக்குளத்துக்கும் இதன் அருகில் அமைந்துள்ள மற்றொரு குளமான கனகாம்பிகைக் குளத்துக்கும் அருகில் இந்த இல்லம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லத்தில் தற்போது 30 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 20க்கும் அதிகமான பிள்ளைகள் எதிர்வரும் வாரங்களில் அனுமதிக்கப்படவுள்ளனர். அனைத்துச் சிறார்களும் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகளின் பிள்ளைகள் என நெர்டோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications