திரைப்பட நகருக்கு ஜெ. பெயரை எடுத்து விட்டு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதே நாங்கள்தானே... கருணாநிதி

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை
கேள்வி: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தினை ரூ.99 லட்சம் செலவில் புனரமைத்திட அ.தி.மு.க. ஆட்சியினர் நிதி ஒதுக்கியதாக செய்தி வந்திருக்கிறதே, அந்த நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டியதே, அ.தி.மு.க. அரசுதானா?
பதில்: அரசு திரைப்பட நிறுவனம் என்று தான் அதற்கு முதன்முதலில் பெயர் இருந்தது. 1989-90-ம் ஆண்டுகளில் தி.மு.க. அரசு என் தலைமையில் இருந்தபோது, திரைப்பட நகர் ஒன்றினை நிறுவிட, சென்னையை அடுத்த தரமணியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போது மத்திய அமைச்சராக இருந்த உபேந்திராவை அழைத்து வந்து, அந்த திரைப்பட நகருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் அப்போது தி.மு.க. அரசு கலைக்கப்பட்ட காரணத்தால், அந்தத் திரைப்பட நகரம் முழுமை பெற்றபோது, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான் தமிழகத்திலே நடைபெற்றது.
அப்போது தமிழகத்திலே உள்ள திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் அந்த திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டவேண்டுமென்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஜெயலலிதா திரைப்படத் துறையினரின் வேண்டுகோளை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த திரைப்பட நகருக்கு ஜெ.ஜெயலலிதா திரைப்பட நகர் என்று தன் பெயரை, தானே வைத்துக் கொண்டார்.
1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான், ஜெ.ஜெயலலிதா திரைப்பட நகர் என்றிருந்ததை எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் என்று பெயர் சூட்டுவதாக அறிவித்து முதன் முதலில் அதன் தலைவராக முக்தா சீனிவாசனை நியமனம் செய்து அறிவித்தேன்.
இப்போது அந்த நகரிலே அமைந்துள்ள திரைப்பட பிரிவிற்கு, முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், அவைகளை உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுப்புவதற்கென அதிவிரைவாக இயங்கக்கூடியதும், அதிக அளவு நினைவுத்திறனை கொண்டதாகவும் உள்ள லைவ் பேக் பெக் என்ற நேரடி ஒளிபரப்பு கருவியை வாங்கிட முதல்வர் ஜெயலலிதா ரூ.18 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
கேள்வி: தி.மு.க. ஆட்சியில் தமிழ் சான்றோர்களுக்கு செய்யப்பட்ட சிறப்பினை விளக்குவீர்களா?
பதில்: கேள்வி-பதில் பகுதியிலே அவ்வளவையும் சொல்ல முடியுமா? இருந்தாலும் உடனடியாக நினைவில் உள்ளதை சொல்ல முயற்சி செய்கிறேன்.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் நீராருங்கடலுடுத்த எனத்தொடங்கும் பாடலை 1970-ல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக ஆக்கியது. தமிழ்ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறைக்காக தனி அமைச்சகம். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககம் நியமித்தல். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அமைத்தது.
தமிழக வரலாறு எழுத தமிழறிஞர்கள் குழு நியமனம். திராவிட பல்கலைக்கழகத்திற்கு ரூ.75 லட்சம் நன்கொடை. தமிழக வரலாறுகள் நூல்களாக வெளியிடப்பட்டன. மலேயா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ரூ.50 லட்சம்.
தமிழறிஞர்களான இ.ம.சுப்பிரமணியன் பிள்ளை, மே.வி.வேணுகோபால் பிள்ளை, மங்கலங்கிழார், மனோன்மணியம் சுந்தரனார், ராய சொக்கலிங்கம், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள். தமிழறிஞர்கள் தேவநேய பாவாணர், மறைமலை அடிகளார், திரு.வி.க., பேராசிரியர் கல்கி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பா.ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், வ.உ.சி., சுத்தானந்த பாரதியார், ஏ.எஸ்.கே.அய்யங்கார், வ.ரா., கவி கா.மு.ஷெரீப், நாவலர் சோமசுந்தர பாரதியார், பரலி நெல்லையப்பர், வ.வே.சு. அய்யர், காரைக்குடி சா.கணேசன், எஸ்.டி.எஸ்.யோகி மற்றும் ஏராளமானவர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையினருக்கு அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது அம்மையார் சிலை எழுப்புவதாக அறிவித்துள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்களை 1998-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலேயே நாட்டுடைமையாக்கி, அவருடைய குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யப்பட்டது.நூற்றாண்டுக்கனவான தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி. உலக தமிழ்ச்செம்மொழி மாநாடு. செம்மொழிப் பூங்கா. பரிதிமாற் கலைஞர் பிறந்த வீடு நினைவில்லமாக ஆக்கப்பட்டது. சிறந்த மென்பொருள் உருவாக்குபவருக்கு கணியன் பூங்குன்றனார் விருது.
கணினியில் தமிழ் முதன்மை இடத்தை பெறுவதற்கு தேவையான பல முயற்சிகள். திருவள்ளுவருக்கு குமரியில் 133 அடி உயரத்தில் சிலை - சென்னையில் வள்ளுவர் கோட்டம். தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications