300 பில்லியன் டாலர் பணம்.. ஈரானுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் டிரம்ப்.. 10 பைசா கூட கிடையாதாம்!
அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுசீரமைப்பு பணிகளுக்காக சுமார் 300 பில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி, இதுக்குறித்து ஜேடி வான்ஸ், ஈரான் தலைவர்களும் பேசினர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள கறாரான முடிவு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானுக்கு நிதி உதவி வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அந்த நாட்டிற்கு '10 சென்ட்' (ஒரு பைசா) கூட நிதியுதவியாகத் தர முடியாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் மத்தியில் கையெழுத்தான 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஈரான் தான் அவசரத்தில் வந்தது - டிரம்ப்
ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில் டிரம்ப், அமெரிக்கா எந்தவித நெருக்கடியாலும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், மாறாக ஈரானே அவசர நிலை காரணமாக பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஈரான் கதை முடிந்துவிட்டது. 60 நாள் பேச்சுவார்த்தைக் காலம் முழுமையாக நடைபெறும். ஆனால் அவர்களுக்கு ஒரு பைசாவும் கிடையாது, 10 சென்ட் கூட வழங்கப்படாது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்-ன் இந்த பேச்சு ஈரானுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தலாம், இதனால் பேச்சுவார்த்தையும் தடைப்பட வாய்ப்புள்ளது.
போர் ஈரானை பலவீனமாகிவிட்டது
டிரம்ப் மற்றொரு பதிவில், சமீபத்திய போர் ஈரானின் ராணுவ திறனை கடுமையாக பாதித்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஈரானிடம் தற்போது செயல்படும் விமானப்படை, கடற்படை, ரேடார் அமைப்புகள் அல்லது வான் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் நடந்த மோதல்கள் ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகக் கட்சிக்கு பதிலடி
அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர், நான்கு மாதங்களுக்கு முன்பை விட தற்போது ஈரான் வலுவான நிலையில் இருப்பதாக விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், அந்த கருத்துகளை உண்மைக்குப் புறம்பானவை என மறுத்துள்ளார்.
போருக்குப் பிறகு ஈரான் முன்னேறியிருக்கிறது என்ற கருத்து தவறான மதிப்பீடு என்றும், தற்போதைய நிலைமை அதற்கு தலைகீழானது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
60 நாள் பேச்சுவார்த்தை காலம் தொடக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான இடைக்கால அமைதி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி மோதல்களை நிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த 60 நாட்கள் விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
அந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், அணுசக்தி திட்டம், பொருளாதார தடைகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய நிரந்தர ஒப்பந்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்காக பெரிய அளவிலான நிதி ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நேரத்தில், டிரம்பின் இந்த புதிய கருத்து சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications