மழையும் பொய்துவிட்டது, வனவிலங்குகள் பயிரை நாசப்படுத்துகிறதே: விவசாயிகள் கண்ணீர்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் காட்டுக்குள் வசிக்கும் மிருகங்களுக்கு உணவு கிடைப்பது அரிதாகி வருகிறது.
இதனால் வனத்தில் வசிக்கும் மிருகங்கள் ஊருக்குள் படையெடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

காட்டுப் பன்றிகளின் அட்டகாசம்
தற்போது நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கடையநல்லூர், புளியங்குடி, களக்காடு, மேக்கரை, வடகரை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள், குரங்குகள், காட்டுப் பன்றிகளால் வாழை, தென்னை, வயல்கள் சேதம் அடைந்து வருகின்றது.

மின் வேலியால் பயன் இல்லை
வன விலங்குகளின் அட்டூழியம் காரணமாக தமிழக அரசு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மின்வேலி அமைத்துள்ளது. ஆனாலும் மின் வேலிகளை தகர்த்துவிட்டு வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்திவிடுகின்றன.

மீண்டும் மீண்டும் நாசம்
வனத்துறையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு விரட்டினாலும் அந்த பொழுதில் ஓட்டம் பிடிக்கும் மிருகங்கள் மீண்டும் மீண்டும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றன.

மழையும் இல்லை... மிருகங்களும் தொல்லை
ஏற்கனவே மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் போட்டுள்ள பயிரை காப்பாற்ற டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சி தவித்து வரும் நிலையில் வனவிலங்குகளால் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை அவர்களை கண்ணீர் வடிக்க செய்துள்ளது.












Click it and Unblock the Notifications