வெளிநாடுகளில் உள்ள இந்திய கருப்புப் பணம் ரூ. 25 லட்சம் கோடி!!

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று National Council for Applied Economic Research (NCAER), National Institute of Public Finance and Policy (NIPFP), and National Institute of Financial Management (NIFM) ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகள் கடந்த மாதமே தங்களது அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் வழங்கிவிட்டன.
இப்போது இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்தும், இதற்கு 30 சதவீத வருமான வரி (சுமார் ரூ. 8.5 லட்சம் கோடி) விதிப்பது குறித்தும் மத்திய நிதியமைச்சகம் திட்டங்களை வகுத்து வருகிறது.
இது தொடர்பான அறிவிப்புகளை விரைவில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவிப்பார் என்று தெரிகிறது.
ரூ. 25 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) 30 சதவீதமாகும்.
இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்த ரூ.25 லட்சம் கோடி வரி கட்டாமல் அரசை ஏமாற்றி, சட்ட விரோதமாக கொண்டு சென்ற பணமாகும்.
இந்தப் பணத்துக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டால், மத்திய அரசுக்கு ரூ.8.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 626 மாவட்டங்களிலும் சுமார் 2,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனைகளைக் கட்ட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அரசு வரியே இல்லாத பட்ஜெட் கூட போட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 50,000 கோடியை மத்திய அரசு மீட்டதும் நினைவுகூறத்தக்கது.
இந்த ரூ. 25 லட்சம் கோடி கருப்புப் பணத்தில் ஊழல், லஞ்சப் பணமும் அடக்கம். கேமன் தீவுகள், மொரீசியஸ் உள்ளிட்ட பல வரி ஏய்ப்புக்கு உதவும் நாடுகள் மூலமாக இந்தப் பணம் உலகின் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல இந்த கருப்புப் பணம் இந்தியாவுக்குள் ரியல் எஸ்டேட் துறைக்குள் வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் வெள்ளமாகப் பாய்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications