டெல்லியில் எழுச்சியோடு குடியரசு தின கொண்டாட்டம்! சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் பங்கேற்பு!

டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி தேசிய கொடியேற்றி வைத்தார். அப்போது வானில் பறந்த ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பெற்ற பின்னர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் முதலாவது குடியரசு தின நிகழ்வு இது.
டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் ஜிக்மே கெசார் வாங்சக் பங்கேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்திவிட்டு கொடியேற்றப்படும் இடத்துக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வருகை தந்தார். அவரை பிரதமர் வரவேற்றார்.
பின்னர் குதிரைப்படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைத்து வரப்பட்டார். அவருடன் பூட்டான் மன்னர் கெசார் வாங்சங்கும் அழைத்துவரப்பட்டார்.
ராஜ்பாத்தில் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டின் முப்படை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். அணிவகுப்பில் பிரமோஸ், அக்னி ஏவுகணைகள் அணிவகுத்தன.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications