64-வது குடியரசு தின விழா- தமிழகத்தில் உற்சாகத்துடன் கொண்டாட்டம்!
சென்னை: நாட்டின் 64-வது குடியரசு தின விழா சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கோலாகலமாக வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா, மோட்டார் சைக்கிள் வீரர்கள் புடை சூழ காரில் வந்து இறங்கினார். அவரைத் தொடந்து ஆளுநர் ரோசய்யா வருகை தந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன் பின்னர் ஆளுநர் ரோசய்யா தேசிய கொடியேற்றினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் வானில் பறந்து மலர் தூவியது.
இதன் பிறகு தரைப்படை, கப்பல்படை, விமானப்படை வீரர்களின் அணி வகுப்பை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். மொத்தம் 46 வகையான அணிவகுப்பு இடம்பெற்றன.
பின்னர் வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கத்தையும், மத நல்லிணக்கத்துற்கான கோட்டை அமீர் விருது, சிறந்த நெல் உற்பத்தி திறனுக்கான சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. 27 அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.
இந்த நிகழ்ச்சிகளை பொதுமக்கள் சாலையின் இருபகுதியிலும் திரண்டு பார்வையிட்டனர். குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்கள் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications