டீசலுக்கு இரட்டை விலையா? சோஷலிச சிந்தனைக்கு எதிராச்சே...: கருணாநிதி கருத்து

சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டீசலுக்கான விலையை லிட்டருக்கு 55 பைசா அளவுக்கு அதிகரித்தும்; அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக டீசல் வாங்கும் நிறுவனங்களுக்கான டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் அளவுக்கு உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் பிறப்பித்துள்ள உத்தரவை; உடனடியாக பிரதமர் ரத்து செய்ய வேண்டுமென்றும்; அவ்வாறு செய்யவில்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும்; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்பே அறிக்கை வெளியிட்ட தொமுச
முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, 23-1-2013 அன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பு அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் டீசலுக்கு எண்ணெய் நிறுவனங்களின் இரட்டை விலை முறையைக் கண்டித்தும்; பொதுத் துறையில் உள்ள போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்கும் வகையில் இரட்டை விலை முறையைக் கைவிட வேண்டுமென்றும்; அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சோசலிச சிந்தனையோடு
போக்குவரத்துச் சாதனங்கள், நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்ற காரணத்தாலும்; அவை அனைத்துப் பகுதி மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைத்திட வேண்டுமென்ற சோசலிச நோக்கத்தோடும்; கழக ஆட்சியில், தனியார் பேருந்து நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் மூலம் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளையும் இணைத்து, பல்லவன், சேரன், சோழன், பாண்டியன், பெரியார், அண்ணா, கட்டபொம்மன் என ஏழு போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. அப்படி நாட்டுமையாக்கப்பட்டதால்தான், தமிழகத்தில் 1000 மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான பேருந்து வசதிகள் கிடைத்திட, கழக ஆட்சியில் முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டன.
சோசலிச சிந்தனைக்கு எதிராக...
தற்போது எண்ணெய் நிறுவனங்கள், குறைந்த அளவில் பயன்படுத்துவோர்க்கு அல்லது தனியார் வாகனங்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா எனவும்; அதிக அளவில் பயன்படுத்துவோர்க்கு லிட்டருக்கு 11.81 ரூபாய் எனவும் உயர்த்தியுள்ளதன் காரணமாக; தமிழகப் போக்குவரத்துக் கழகங்கள் நாளொன்றுக்கு 2.32 கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதல் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள இந்த இரட்டை விலை முறை - பொதுத் துறையிலுள்ள போக்குவரத்துக் கழகங்களைப் பெரிதும் பாதித்திடும் ஒரு பிற்போக்கான நடவடிக்கையாகும். எனவே சோசலிசச் சிந்தனைகளுக்கு மாறான இந்த இரட்டை விலை முறையை ரத்து செய்திடத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications