'கருப்பசாமிகளின்' தயவு இல்லாமலேயே ஜெயலலிதா பிரதமராவார்: ஓ.பி. பேச்சு

வடசென்னை, வடக்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கையில் நல்ல பல திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். பெண்கள் பயனடையும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி இருக்கிறார்.மாணவர்கள் படிப்பதற்காக ரூ.17,000 மதிப்புள்ள இலவச லேப்-டாப்கள் வழங்கியுள்ளார்.
கருப்பசாமி தயவு தேவையில்லை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில கருப்பசாமிகளின் தயவால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்ததாக கூறினார்கள்.இதன்பின்பு உள்ளாட்சி தேர்தலில் அந்த கருப்பசாமிகளோடு நாம் கூட்டணி வைக்கவில்லை. இருந்தாலும், 98 சதவீதம் நாம் வெற்றி வாகை சூடினோம். இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் வெற்றி பெற்று பல்வேறு பதவிகளில் உள்ளனர். 10 மாநகராட்சிகளையும் நாம் கைப்பற்றி இருக்கின்றோம்.
யாராலும் அழிக்க முடியாது
அதிமுகவில் 14 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததை, 1.5 கோடி உறுப்பினர்களாக மாற்றிக் காட்டியவர் முதல்வர் ஜெயலலிதா ஆவார்.எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்திற்காக அதிமுகவை உருவாக்கினாரோ, அதை சிந்தாமல், சிதறாமல் புரட்சித் தலைவி காத்து வருகிறார். அதிமுகவை கருணாநிதியாலோ, விஜயகாந்தாலோ அழிக்க முடியாது. அதிமுகவை எக்கு கோட்டையாக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி உள்ளார்.
விஜயகாந்த சட்டசபைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை?. சரக்கு இருந்தால்தானே அவர் கேள்வி கேட்பார். அவரிடம் சரக்கு இல்லையே!
நாட்டின் பிரதமராவர்
நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும் என்றால், முதல்வர் ஜெயலலிதா யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்கு வெற்றிவாகை சூடித்தர வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், நாட்டின் பிரதமராக ஜெயலலிதா வருவார் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications