சாதிப் பேச்சு- ஆசிஷ் நந்தியை சிறையிலடையுங்கள்!-தேசிய எஸ்.சி. ஆணைய தலைவர் புனியா!!
டெல்லி: நாட்டின் ஊழலுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர்தான் என்று காரணம் சாதி அமிலத்தை உமிழ்ந்த 'சமூக வியலாளர்' ஆசிஷ் நந்தியை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் பேசிய ஆசிஷ் நந்தி, ஊழலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களே காரணம் என்று பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஆசிஷ் நந்தியை தூக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, இத்தகைய குற்றச் செயலை செய்திருக்கும் ஆசிஷ் நந்தியை சிறையிலடைத்திருக்க வேண்டும். ராஜஸ்தான் மாநில அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காட்டம் காட்டியிருக்கிறார்.
மக்களவை சபாநாயகர் மீராகுமார் கருத்து தெரிவிக்கையில், அடிமை முறையைவிட சாதிய முறை என்பது மிகவும் மோசமானது. அடிமை முறையிலாவது கடைசியில் விடுதலை கிடைத்துவிடும். ஆனால் சாதிய அமைப்பு முறையில் ஒருபோதும் விடுதலை கிடைக்காது என்றார்.