ஷாரூக் பாகிஸ்தான் வந்துவிட்டால் உரிய மரியாதை தருவோம் - பாக் தீவிரவாதி
மும்பை: இந்தி நடிகர் ஷாரூக்கான் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் வந்தால் அவருக்கு உரிய மரியாதை அளிப்போம் என்று மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி தெரிவித்துள்ளான்.
சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியொன்றில், சொந்த நாடான இந்தியாவில் தன்னை குற்றவாளியாக சிலர் பார்ப்பதாக ஷாரூக் குறைபட்டிருந்தார்.
அந்த பேட்டியில், 'என் சொந்த நாடான இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு நான் விசுவாசமாக இருப்பதாக சில தருணங்களில் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
எனது தந்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர். நான் ஒரு முழுமையான இந்தியன். இதெல்லாம் தெரிந்திருந்தும் என்னை எதிர்த்து பேரணிகள் நடந்தன.
என்னை இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்றுவிடு என்று வெறுப்பைக் கக்கிய தலைவர்களும் உண்டு.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு தேசபக்தி என்பதே இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களின் நேரடி தாக்குதலுக்கு நான் இலக்காகி உள்ளேன்," என்றார்.
ஷாரூக்கானின் இந்தக் கருத்தைக் கேள்விப்பட்ட, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் முஹம்மது சயீத், பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்குமேயானால், அவர் பாகிஸ்தானுக்கு வந்து விடலாம்.
அவருக்கு பாகிஸ்தான் உரிய மரியாதையை வழங்கும்," என்றார்.