பிரேசிலில் நைட் கிளப்பில் பயங்கர தீ: 233 பேர் பலி, 100 பேர் காயம்
ரியோடி ஜெனிரோ: தெற்கு பிரேசிலில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 233 பேர் பலியாகினர்.
தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்ட் டோ சுல் மாநிலத்தில் உள்ள சாண்டா மரியா நகரில் கிஸ் என்னும் கேளிக்கை விடுதி உள்ளது. அந்த விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 2,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு இசைக்குழு பாடுகையில் விடுதிக்குள் வான வேடிக்கை விடப்பட்டதில் அது உட்கூரையில் பட்டு தீப் பிடித்தது.
இதையடுத்து அங்குள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு பக்க சுவரை இடித்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். அதற்குள் மூச்சு திணறியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 233 பேர் பலியாகினர். முதலில் 245 பேர் பலியானதாக கூறப்பட்டது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை 233 என்று உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 20 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.