தாங்க முடியாத ஓவர் பாரத்துடன் கேரளா செல்லும் லாரிகள்.. அடுத்தடுத்து விபத்துகள்
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சரக்கு வாகனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வாகனங்களினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து அதிக அளவில் பாரத்தை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் இன்று செங்கோட்டை அருகே பள்ளத்தில் கவிழ்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 4 சோதனைச் சாவடிகள் இருந்தும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

முக்கியமான தேசிய நெடுஞ்சலை
தமிழகத்தில் இருந்து திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளா மாநிலத்திற்கு செல்வதற்கு பல வழிகள் இருந்தாலும் இது எளிதான வழி என்பதால் இந்த தேசிய நெடுஞ்சலையை சரக்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.

கேரளாவின் எல்லைப் பகுதி
அத்தியாவசிய பொருட்களுடன் மணல்,சிமெண்ட்,மரத்தடிகள், உள்ளிட்டவையும் தினமும் ஆயிரகணக்கான சரக்கு வாகனங்களில் இரு மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள செங்கோட்டை புளியரை வழியாகச் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் 24மணிநேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் 4சோதனை சாவடிகளும் அமைந்துள்ளன.

அதிக பாரம் ஆபத்து
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இந்த பாதைவழியாக அதிக பட்சம் 22டன் பொருட்கள் மட்டுமே கொண்டுசெல்ல அனுமதி உள்ளது.ஆனால் வாகன உரிமையாளர்கள் அதிக பணத்துக்கு ஆசைபட்டு சுமார் 50டன் வரை (லாரி எடையோடு சேர்த்து) லோடு ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.

அடிக்கடி விபத்தில் சிக்கும் அவலம்
இந்த வாகனங்கள் அதிக வேகத்தோடு செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். இதனால் திருவனந்தபுரம் விமானநிலையம்,அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபடுவதாகவும் கூறியுள்ளனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த லாரிகள்
இந்த சூழ்நிலையில் நேற்றுமாலை இலத்தூர் ராம்கோ சிமெண்ட் குடவுனில் இருந்து 350மூடை சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி சென்ற லாரி புளியரை தாட்கோ நகர் அருகே செல்லும்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையின் ஓரத்திலிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த லாரி மீது கேரளா நோக்கி சென்ற மற்றொரு சரக்கு லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் பள்ளத்தில் கவிழ்ந்தன.
மோதிய லாரி பிரானூர் பார்டரில் இருந்து கேரளா நோக்கி சுமார் 40டன் எடை மரத்தடிகளை ஏற்றி வேகமாக வளைவில் சென்றது. அதிக பாரம் காரணமாகவே டிரைவரால் கட்டுப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்த வாகனம் மீது மோதியுள்ளது. இதில் சாலையின் ஓரத்தில் நின்ற ஒரு இருசக்கர வாகனமும் சேதமடைந்தது.

போலி எடைச் சீட்டுக்கள்
அளவுக்கு அதிகமாய் பாரம் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் போலி எடை சீட்டுக்கள் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. எனவே இதனைத் தடுக்க திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேனர் வசதியோடு கூடிய நவீன எடை நிலையத்தையும்,அவசர மருத்துவ முகாமினை அமைக்க மத்திய,மாநில அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதன் மூலம் இந்த சாலையில் விபத்து ஏற்படுவது தடுக்கப்படும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications