அழகிரி பிறந்த நாள்: மதுரையில் பைக் ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசல்
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி மதுரையில் நடைபெற்ற இருசக்கர வாகன ஊர்வலத்தால் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் ஊர்வலம், முளைப்பாரி, என திருவிழா போல கொண்டாடுவார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும் போது மதுரையே அமர்க்களப்படும்.
எதிர்கட்சியாக மாறினால் அழகிரியின் பிறந்தநாள் விழாவை கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் உடன்பிறப்புகள். ஆனால் இன்றைய தினம் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு நகரின் முக்கியப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல் பகுதிகளில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. காலை நேரத்திலேயே அழகிரியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர்.
இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் தங்கள் குழந்தைகளை, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் இதில் சிக்கிக் கொண்டு பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். பரபரப்பான காலை நேரத்தை தவிர்த்துவிட்டு கூட்டமில்லாத நேரத்தில் ஊர்வலத்தை வைத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications