விஸ்வரூபம், வைகோ போராட்டம், ராமதாஸ் கூட்டம்: பரபரப்பில் நெல்லை
நெல்லை: நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், விவசாயிகள் தற்கொலையை தடுக்கக் கோரியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் வருகை, விஸ்வரூபம் திரைப்பட பிரச்னை என நெல்லை நகரம் பெரும் பரபரப்பில் திண்டாடி வருகிறது.
நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வலியுறுத்தியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நெல்லை ஜங்ஷன் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல், அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சார்பில் நெல்லையில் நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் நெல்லை வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடக்கவுள்ள ஹோட்டல் முன்பாக தலித் அமைப்பினர் குவிந்துள்ளனர்.
மேலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பாக ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த அனைத்து விஷயங்களாலும் பாதுகாப்புக்காக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல்லை நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
மாலை 5 மணிக்கு நூல் வெளியீட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் என நெல்லை மாநகரத்தில் ஒரே நாளில் அரசுக்கு எதிராக வைகோ போராட்டம், விஸ்வரூபம் பட வெளியீடு, ராமதாசை கண்டித்து போராட்டம், நூல் வெளியீட்டு விழா என அனைத்தும் ஒருசேர நடப்பதால் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியால் சோதனை கலந்த வேதனையில் தவித்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications