விரிசலான ஆர்.எஸ்.எஸ்.- பாஜக உறவு! சீராக்க போராடும் ராஜ்நாத்சிங்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கும் இடையேயான உறவு சீர்குலைந்து போயிருப்பதால் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டாலும் அதன் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் எடுக்கும். நிதின் கத்காரியை மீண்டும் பாஜக தலைவராக்க ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விருப்பத்துக்கு மாறாக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொழுது நிதின் கத்காரியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களும் பாஜக தலைவர்களும் இணைந்தே வெளியேற்றிவிட்டதாக 'கட்டுப்பாட்டுக்கு' பெயர் போன ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலேயே கலகக் குரல் வெடித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்களுடன் இன்று ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், எல்.கே. அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான தத்தாத்ரேயா, சுரேஷ் சோனி, பைய்யாஜி ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு பிளவும் இல்லை என்றுகூறினார்.
இதனிடையே ஆர்.எஸ்.எஸ்.- பாஜக இடையே ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது. இரு கட்சிகளிடையே இப்படியான ஒரு குழு தற்போதுதான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications