எம்.ஜி.ஆருக்கு கமல் பற்றி ஜெ. எழுதிய கடித ஆதாரம் என்னிடம் இருக்கிறது: கருணாநிதி

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது கமல்ஹாசனை விமர்சித்து ஜெயலலிதா கடிதம் எழுதியதாக கருணாநிதி முரசொலியில் எழுதியிருந்தார். இதனை இன்று செய்தியாளர்களிடம் மறுத்த ஜெயலலிதா, கருணாநிதி மீது அவதூறு வழக்கு போடப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்குப் பதிலளித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இன்றைய முரசொலி நாளிதழில் 'வெளியே வந்து விட்டது பூனைக் குட்டி' என்ற தலைப்பில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது அம்மையார் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனைப் பற்றி ஒருமையில் கண்டனம் செய்து குறிப்பிட்டுத் தெரிவித்த சில வாசகங்களை எழுதியிருந்தேன்.
அப்படி நான் எழுதியது கற்பனையான குற்றச்சாட்டு என்றும் தான் தினமும் எம்.ஜி.ஆருடன் பேசுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்ததால் எதற்காக கடிதம் எழுத வேண்டும் என்றும் அதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தனது நீண்ட பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
நான் எழுதியதற்கான போதுமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. முதலமைச்சர் என் மீது வழக்குப் போடும்போது நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications