கொன்னவனும் கூட அழுகிறானே...: பொட்டு சுரேஷ் வீட்டில் மு.க. அழகிரியிடம் புலம்பிய மூதாட்டி!

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷை மர்ம நபர்கள் நேற்று வெட்டி படுகொலை செய்தனர்.இப்படுகொலைக்கு திமுகவினரே காரணமா? அல்லது தொழில் போட்டி காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்ளிட்ட திமுகவினர் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை ரவுடி அட்டாக் பாண்டி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மு.க. அழகிரி அஞ்சலி செலுத்த பொட்டு சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு நடந்த சம்பவங்கள் மதுரை திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.
அழகிரியிடம் கதறி அழுத பொட்டு சுரேஷ் மனைவி "ஐந்து பேர் கூடஇருந்தே கொலை செய்து விட்டார்களே! அவர்களைக் கடவுள்தான் கேட்கணும்!" என்று அழகிரியிடம் புலம்பினார். பொட்டு சுரேஷ் மனைவியின் புலம்பலானது திமுகவினர்தான் கொலை செய்துவிட்டனர் என்று கூறுவது போல் இருந்ததால் அழகிரியால் எதுவும் பேசமுடியவில்லை.
அத்துடன் முடிந்துவிடவில்லை அந்த நேரத்தில் மற்றொரு மூதாட்டி அழகிரியிடம் வந்து, கொன்னவனும் கூட இருந்தே அழுது கொண்டிருக்கிறானே.. என்று சொல்ல அழகிரியுடன் சுற்றி நின்ற திமுகவினர் ஆடிப்போய்விட்டனர். அவர் சொல்ல வருவது யாரை என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பொட்டு சுரேஷ் குடும்பத்தினரின் புலம்பலை போலீசாரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்!












Click it and Unblock the Notifications