புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் காலமானார்! ஜி.கே வாசன், ராமதாஸ் இரங்கல்!
காரைக்கால்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ப. சண்முகம் (வயது 84) இன்று காலமானார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் நெடுங்காட்டில் தமது வீட்டில் படியில் ஏறும் போது இன்று காலை மயங்கி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக காரைக்கால அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுபெரும் காங்கிரஸ் தலைவரான ப.சண்முகம் விடுதலைப் போராட்ட தியாகி, புதுவை முதல்வராகவும், 2 முறை எம்.பி.யாகவும் இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார். அவரது இழப்பு புதுவை காங்கிரசுக்கு மட்டுமல்ல. மூப்பனாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சண்முகத்தின் இழப்பு அகில இந்திய காங்கிரசுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் புதுவை காங்கிரசாருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், புதுவை முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ப. சண்முகம் இன்று காலை அவரது வீட்டில் மயங்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
புதுவையில் கடந்த 1954-ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ அவை அமைக்கப்பட்ட போது அதன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அதன்பின் இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். காங்கிரஸ் தலைவர்களான இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்து புதுவை மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். இரண்டு முறை புதுவை முதலமைச்சராக இருந்த போதும் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தியவர்.
தூய்மையான, நேர்மையான அரசியலுக்கு சொந்தக்காரரான அவர் என்னிடம் நெருக்கமான நட்பும், பாசமும் கொண்டி ருந்தார். பொதுவாழ்க்கையில் தம்மை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்ட அவர் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது மறைவால் புதுவை மாநிலம் தன்னலம் கருதாத தலைவரை இழந்து விட்டது. அவரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கும், நன்பர்களுக்கும் புதுவை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.