ஜெ. பிடிவாதத்தால் மருத்துவமனையாக தலைமைச் செயலகம்: கருணாநிதி செம காட்டம்!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அரசின் கொள்கை முடிவு என்ற பெயரில் முதல்வர் ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் புதிய தலைமைச் செயலகமானது மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1983-ம் ஆண்டு முதலே தமிழகத் தலைமைச் செயலகத்திற்குப் புதிய கட்டிடம் கட்ட இடம் தேடப்பட்டது. 1983-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். புதிய தலைமைச் செயலகத்தைத் திருச்சியில் கட்டலாமா என்று எண்ணினார். 2003-ல் ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகத்தை திருவிடந்தை, தையூர் பகுதிகளில் கட்டலாமா என்று யோசித்தார்.

தி.மு.கழக ஆட்சியில் கட்டி 14-8-1975 அன்று திறந்து வைக்கப்பட்ட- நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே கோட்டையில் இருந்து உடனடியாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதா கூறினார். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது முடிவெடுத்தார்.

நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலை நோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. அந்தக் கல்லூரியின் ஆசிரியர், மாணவியர் மற்றும் பெற்றோர் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது.

பின்னர், சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று, அன்றைய முதல் அமைச்சரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.

அதையெல்லாம் மனதிலே கொண்டுதான், முந்தைய ஆட்சி எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தி.மு.கழக ஆட்சியிலே 2007-ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது.

13-7-2010-ல் புதிய தலைமைச் செயலகம்-சட்டப் பேரவைக் கட்டிடங்களின் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு நடைபெற்றது.

மிகவும் சிறப்பான முறையில் தலைமைச் செயலகத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டு கட்டிடம் 1000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டமிடப்பட்டு, அதில் 581.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்ட பிறகு; அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று 19-8-2011 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து, அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்தாமல் மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள கட்டிடம் தி.மு.கழக ஆட்சியிலே கட்டப்பட்டு, இந்தியப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது என்பதுதான் அவரது வெறுப்புக்கு ஒரே காரணமாக இருக்க முடியும்.

தலைமைச் செயலகம் அங்கே இயங்க முடியாது என்றால் பன்நோக்கு மருத்துவமனை மட்டும் அங்கே இயங்க முடியுமா? மருத்துவமனையாக மாற்ற ஆக்சிஜன் நிரப்பும் இடம், சறுக்குப் படிக்கட்டுகள், வார்டுகள் போன்ற வசதிகள் இந்தக் கட்டிடத்தில் இல்லை.

இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் அதற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, தற்போது அதற்காக 30 கோடி ரூபாய் செலவழிக்க அ.தி.மு.க. அரசு முன் வந்திருக்கிறது என்றால், அம்மையாரின் பிடிவாதத்திற்காக செய்யப்படும் செலவுதானே அது?

இனிமேல் ஒரு தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டுமென்றால் அதற்காக செலவழிக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு? கொள்கை முடிவு என்ற பெயரில் தமிழக மக்களின் வரிப்பணம் எந்த அளவிற்கு விரயமாகிறது, இன்னும் விரயமாகப் போகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன? ஆமாம்; கொள்கை முடிவு என்பதை எந்த ஆட்சியிலும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் அல்லவா? என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+