காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பிப்.20க்குள் கெஜட்டில் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

காவிரி நீர் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது அரசின் கடமை. தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இன்னமும் மத்திய அரசு அதை செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கையில், கர்நாடகா அரசுதான் மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். இதனால் கர்நாடகாவுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வரும் 20-ந் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இத்துடன் தஞ்சாவூர், திருவாரூ, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயிர் நிலவரத்தை அறிய 3 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டிருக்கிறது. இக்குழு நாளை மறுநாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications