அமைச்சராக ஷாஜகான்! தலைமை செயலகத்தில் ஒலித்த தொழுகை பாடல்.. நாற்காலியில் அமரும் முன் நடந்த சம்பவம்
சென்னை: தவெக தலைமையிலான அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று அக்கட்சியிலிருந்து ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அமைச்சர் இருக்கையில் அமர்வதற்கு முன்னர் தொழுகை பாடல் ஒலித்திருந்தது கவனம் பெற்றிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு பெரும்பான்மையை பெறவில்லை.

இப்படி இருக்கையில்தான் திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகளை தவெக நாடியது. காங்கிரஸ் உடனே சென்று ஆதரவு கொடுக்க.. அடுத்ததாக இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆளுநர் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதால் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம். அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்று இடதுசாரிகள் சொல்லிவிட்டார்கள்.
இதனை தொடர்ந்துதான் ஐயுஎம்எல் ஆதரவு தெரிவித்தது. பின்னர், விசிகவும் ஆதரவு தெரிவித்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தொடக்கத்தில் விஜய்க்கு ஆதரவளிக்க ஐயுஎம்எல் முன்வரவில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில்தான் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் என்று தெளிவாக கூறியிருந்தது. மட்டுமல்லாது மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுதான் எங்கள் முடிவு என்றும் கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உறுதியாக கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில், தற்போது அமைச்சரவையில் ஐயுஎம்எல் பங்கேற்றிருக்கிறது. இது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஷாஜகான் தற்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். அவர் தனது அமைச்சர் சேரில் அமர்வதற்கு முன்னர் தொழுகை பாடல் பாடப்பட்டது. பின்னர் அவர் தனது அமைச்சர் இருக்கையில் அமர்ந்தார்.
வழக்கமாக அமைச்சர்களாக, எம்எல்ஏக்களாக பதவியேற்பவர்கள் கடவுள் மீது ஆணையாக என்று பதவியேற்றுக்கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் இவ்வாறு பதவியேற்கின்றனர். அந்த வகையில் அமைச்சர் நாற்காலியில் உட்காருவதற்கு முன்னர் தொழுகை பாடல் ஒலிக்கப்பட்டது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications