என்னுடைய நண்பன் தினேஷ் கார்த்திக்.. 16 ஆண்டு கால மனக்கசப்பை முடிவுக்கு கொண்டு வந்த முரளி விஜய்!
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கை, முரளி விஜய் தன்னுடைய நண்பன் என்று அழைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களான முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடையில் இருந்த மனக்கசப்பும், பிரச்சனையும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த விவகாரம் காரணமாக தினேஷ் கார்த்திக் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சோகத்தை அனுபவித்தார்.

இதன்பின் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்த பின்னரே தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் வெளிச்சம் பிறந்தது. அதன்பின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் உச்சம் பெற்றார். இருப்பினும் இரு வீரர்களுமே ஒருவருக்கு ஒருவர் நேரடியாக பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு சில போட்டிகளில் ஒன்றாக ஆடிய போதும், பேசாமல் அமைதி காத்தனர்.
இந்த நிலையில் முரளி விஜய் முதல்முறையாக தினேஷ் கார்த்திக் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் முரளி விஜய் பேசுகையில், நான் இதை இந்த மேடையில் சொல்வது சிலருக்கு விசித்திரமாக (Weird) தோன்றலாம். ஆனால், உண்மையை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தினேஷ் கார்த்திக்கை சிறுவயதில் இருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்.
சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றே சொல்லலாம். அப்படிதான் நான் நினைக்கிறேன். என்னுடைய நண்பன்.. நான் ஸ்ட்ரைக்கரில் இருந்து அவரின் ஆட்டத்தை பலமுறை ஒரு ரசிகனாக ரசித்துள்ளேன். அவரின் கிரிக்கெட் தொடர்பாக சிந்தனைகளையும், கற்றலையும் என்னுடன் பலமுறை பகிர்ந்துள்ளார். அதற்காக நிச்சயம் நான் அவரிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முரளி விஜய்யின் இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வர்ணனையாளராக இருந்த போது கூட இருவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசியதில்லை. தற்போது பிரச்சனைக்கு காரணமாக முரளி விஜய் நேரடியாக தினேஷ் கார்த்திக்கை சமாதானம் செய்யும் வகையில் பேசி இருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications