பெங்களூரில் குடிநீருக்கு தட்டுப்பாடு.. வாகனங்கள், தோட்டங்களுக்கு பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
பெங்களூர்: கர்நாடகாவில் குடிநீரை வீணாக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததன் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் குடிநீரை வீணாக்கக்கூடாது என்றும், குடிநீரை நீச்சல் குளங்களில் பயன்படுத்தக்கூடாது எனவும், இந்த விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் எல் நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள் நிலையில், குடிநீரை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அத்தியாவசியமற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியாக பெய்யவில்லை. இதன் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பவில்லை. போதிய நீர் இருப்பு இல்லாத காரணமாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் வாரியம் உத்தரவு
இந்த நிலையில் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம், குடிநீரை வீணாக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூர் குடிநீர் வரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரில் 1.40 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டியது அவசியமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. அதனால் பெங்களூரில் நீர் வீணாவதை தடுப்பது அவசியம் ஆகும். அதனால் நகர மக்கள் குடிநீரை எச்சரிக்கையுடன் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் அபராதம்
அதன்படி, குடிநீரை நீச்சல் குளங்களில் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க்கப்படும். அதன் பிறகும் விதிமுறையை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராத்துடன் தினமும் ரூ.500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும். கார்கள் கழுவதல், வீட்டு தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
குடிநீரை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதுகுறித்து பொதுமக்கள் 1916 என்ற உதவி மையத்துக்கு புகார் தெரிவிக்கலாம். இந்த தடை உத்தரவு மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் நீச்சல் குளங்களுக்கு பொருந்தாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications