“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றணும்”.. தவெக அரசுக்கு வெற்றிமாறன் கோரிக்கை!
சென்னை: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என இயக்குநர் வெற்றிமாறன் வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது 2 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக கூறப்படும் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பலருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்று, இந்த வழக்கை தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது திருவுருவப் படத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் வெற்றி மாறனும், ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நானும் வலியுறுத்துகிறேன். இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முந்தைய அரசு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தது என நினைக்கிறேன். இந்த அரசு சிபிஐ விசாரணைக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications