பழனி கோயிலில் யார் பாருங்க.. படி பாதையில் பெண்ணை அலேக்கா தூக்கி.. திகைத்து நின்ற திண்டுக்கல்
திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் படி பாதையில் அநாகரிகமான முறையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்களின் செயல், ஆன்மீக அன்பர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை உள்ள நிலையில், விதியை மீறி நடத்தப்பட்ட இந்தச் செயல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. என்ன நடந்தது பழனியில்?
தமிழகத்தின் கோயில்கள் மிகவும் பாரம்பரியமும், பழமையும், சிறப்புகளையும் பெற்றவை.. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்..

கோயில்களுக்கென்று சில மாண்புகள், மகிமைகள் உள்ளன.. அதனால்தான் இந்த கோயில் வளாகத்தில், யாரும் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதையும் மீறி சிலர் கோயில் வளாகத்தில் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர்... பக்தி காரணமாக இப்படி அவர்கள் செய்வதால், பலரும் தடுப்பதில்லை.
கோயிலுக்குள் ரீல்ஸ் வீடியோ
இதை சாக்காக வைத்து, கோயில் வளாகத்துக்குள் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ எடுக்கும் நிகழ்வுகளும் நடந்ததுண்டு.. கடந்த வருடம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள், சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய 2 இளைஞர்களும், 'ஸாரி' கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது அதுபோலவே பழனி கோயிலிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது.
பழனி கோயில் படிப்பாதை
முருகனின் அருளை வேண்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்லும் படி பாதையில் இருமுடி சுமந்து, அரோகரா முழக்கமிட்டு பக்திப் பரவசத்துடன் ஏறுவது வழக்கம். இத்தகைய புனிதமான பாதையில், சமீபகாலமாகவே சில இளைஞர்கள் மற்றும் சமூக வலைதள ஆர்வலர்கள் பக்தியின் எல்லையை மீறிச் செயல்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது, ஆன்மீக அன்பர்கள் இடையே கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றும் அப்படித்தான் நடந்துள்ளது.. பழநி முருகன் கோயில் படிப் பாதையில், ஒரு பெண்ணை துாக்கியபடி நடந்து சென்றுள்ளார் இளைஞர்.. ரீல்ஸ் எடுப்பதற்காக இப்படி செய்துள்ளதாக தெரிகிறது.. இதைப்பார்த்ததுமே அங்கிருந்த பக்தர்கள் முகம் சுளிக்க துவங்கிவிட்டார்கள்.
பெண்ணை தூக்கி நடந்த இளைஞர்
சற்று நேரத்தில் பழநி கோயில் படிபாதையில் பெண்ணை துாக்கியப்படி இளைஞர் நடந்து செல்வதும், பின்னணியில் சினிமா பாட்டு ஒலித்தவாறு அந்த வீடியோ, சோஷியல் மீடியாவில் பரவிவிட்டது.. இதை பார்த்த பக்தர்கள் கணவன், மனைவியாக இருந்த போதிலும் கோயில் படிப்பாதையில் இப்படி கொள்வது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள்..
பழநி முருகன் கோயிலுக்கு செல்போனை கொண்டு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.. கோயில் நிர்வாகத்தின் சார்பில் இது குறித்துப் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டும் வருகின்றன. அப்படியிருந்தும்கூட, படிப்பாதையில் செல்போனிலேயே இந்த ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது..
பழனி மலைப்பாதையில் வீடியோ
கோயில் படி பாதையின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே நடக்கும் இது போன்ற அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தப் போதுமான பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
படி பாதையில் ரோந்து செல்லும் பணியாளர்களை அதிகரிக்கவும், அலைபேசி பயன்பாட்டைக் கண்காணிக்கவும் கோயில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது...!!












Click it and Unblock the Notifications