‘முன்னேறிச் செல்’: வைகோவின் அடுத்த பிரச்சார பயணம்.. மதிமுக பொதுக்குழுவில் முடிவு
மதிமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் அவை தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள விஜய்ஸ்ரீ மஹாலில் இன்று நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் நடந்த கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, நாசேதுரை, பொருளாளர் மாசிலாமணி, மாநில நிர்வாகிகள், அப்துல்லா பெரியார்தாசன், வழக்கறிஞர் தேவதாஸ், மலர்மன்னன், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் என சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
தமிழ் நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்குச் சிறப்பு ஒதுக்கீடாக வறட்சி நிவாரண நிதி அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கிட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
‘முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று' என்று, கரூர் மாநாட்டில் செய்யப்பட்ட பிரகடன இலக்கை அடையும் குறிக்கோளுடன் மக்களைச் சந்திக்கின்ற வகையில், ‘முன்னேறிச் செல்' எனும் பிரச்சாரப் பயணத்தை, வைகோ தலைமையில் நடத்துவது. இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம் பெயர் ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்கும் விதத்தில், சுதந்திரத் தமிழர் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய ஆதரவை, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு தேசிய இன மக்களிடமும், உலக நாடுகளிலும் உருவாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்வது.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் கட்டுப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது. கலாச்சாரச் சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும், முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த மக்கள் ஆதரவைத் திரட்டவும், வைகோ அறிவித்தபடி பிப்ரவரி 18 முதல் 28-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருபோரூர் ஒன்றியம் கோவளத்தில் தொடங்கி மறைமலை நகர் வரையிலும்,
ஏப்ரல் 16 முதல் 29ம் தேதி வரை பொள்ளாச்சியில் தொடங்கி ஈரோடு வரையிலும், மூன்றாவது கட்டமாக ஜூன் மாத இறுதியில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்திலும் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைப்பயணங்களை வெற்றிகரமாக நடத்துவது. உங்கள் பயணம் உங்கள் கையில் என்ற மோசடித் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரியும், அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்துக்கு முழுமையான ஆதரவு கொடுப்பது என்றும் பொதுக்குழு தீர்மானிக்கிறது. ஈழத் தமிழர்களை விடுவித்து தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளி முகாம்களில் வாழ்ந்திட அனுமதிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும். அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானமெல்லாம் சரி ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி என்ன ஆலோசித்தீர்கள்?