ஒன்றரை வயது சிறுமியை சீரழித்த கார் டிரைவர்... அவமானத்தில் டிரைவரின் தாயார் தற்கொலை
சென்னை: சென்னையில் ஒன்றரை வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் ஒரு கார் டிரைவர். இந்த செய்தி அறிந்ததும் டிரைவரின் தாயார் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்து தனது மகனின் செயலுக்காக வேதனைப்பட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சுசிலா. தனியார் வங்கியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதிலும், ஒன்றரை வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டு முன்பு ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சுசீலா வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் குமரன் என்பவர் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தார். திடீரென அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்று இருப்பார் என்று சுசிலா கருதினார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த சுசிலா குழந்தையை தேடினார். அப்போது பக்கத்து தெருவில் குழந்தை அழுதபடி கிடந்தது. குமரன் குழந்தையை ரோட்டில் போட்டு விட்டு ஓடியது தெரிய வந்தது.
குழந்தையின் உடல் முழுவதும் காயத்துடன் வீக்கம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசிலாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அலறியடித்தபடி அங்கு வந்து குழந்தையை பார்த்து கதறினார்.
குமரன் குழந்தையை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியிருந்தது தெரிய வந்தது. இந்தநிலையில், டிரைவரின் தாய் கஸ்தூரியை பொதுமக்கள் அழைத்து வந்து சிறுமியை டிரைவர் சித்ரவதை செய்தது பற்றி தெரிவித்தனர்.
உடனே அவர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம். குழந்தையின் சிகிச்சை செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் சுசிலா இதை ஏற்கவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தினார்கள். குமரன் எங்கு இருக்கிறார் என்று அவரிடம் துருவி துருவி விசாரித்தார்கள். அதற்கு அவர், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார். டிரைவர் பற்றி தகவல் தெரிந்தால் போலீசுக்கு சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர். அவரது 2 மகன்கள் சதீஷ், ஆனந்தனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனால் அவமானமடைந்த கஸ்தூரி மன வேதனை அடைந்தார். இதையடுத்து இன்று காலை தனது வீட்டில்தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கஸ்தூரியின் கணவர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறாராம். இவர் தனது மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்து இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கஸ்தூரி தனியாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்தார். அப்பகுதியினர் மத்தியில் நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் அவரது மகனின் செயலால் இப்போது பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications