கண்டிப்பாக ஆஜராக வேண்டும்... கலாநிதி மாறனுக்கு தாம்பரம் கோர்ட் உத்தரவு

மார்ச் 2ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பம்மல் நகராட்சித் தலைவர் இளங்கோவன். இவர் சார்பில் வழக்கறிஞர் ஜெயமாலினி, தாம்பரம் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
டிசம்பர் 11ம் தேதி, நில அபகரிப்பு என்ற தலைப்பில், சன் நியூஸ் தொலைக்காட்சியில், பல்லாவரம் எம்.எல்.ஏ., தன்சிங், பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் ஆகியோர், நில அபகரிப்புக்கு துணை போயினர் என, காலை, 10.00 முதல் பிற்கபல் 2.00 மணி வரை தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை கண்டித்து, மனுதாரர்கள் சார்பாக, கடந்த மாதம், 13ம் தேதி, சன் நியூஸ் தொலைக்காட்சிக்கும், சன் குழும நிறுவனத்தாருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட பின், அதற்கான எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து, ஜனவரி 9ம் தேதி, மறு அறிவிப்பும், 10ம் தேதி, தந்தி தகவலும் அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் வராததால், மனுதாரர்கள் சார்பில், சன் குழும தலைவர் கலாநிதி மற்றும் சன் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் மீது, தாம்பரம் நீதிமன்றத்தில், ஜனவரி 18ம் தேதி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு, கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதன்பின், மனுதாரர் மற்றும் இதர சாட்சிகளின் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த, 2ம் தேதி வழக்கு சம்பந்தமாக வாதாடப்பட்டது.
வழக்கில் முகாந்திரம் உள்ளது என மாஜிஸ்திரேட் கருதியதால், நேற்று, வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மார்ச், 2ம் தேதி, சன் குழும தலைவர் கலாநிதி மற்றும் சன், டிவி தலைமை செய்தி ஆசிரியர் ஆகியோர், நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications