எனக்கு மாப்பிள்ளை பிடிக்கலை… திருமணம் முடிந்தபின் எஸ்கேப் ஆன மணப்பெண்
கன்னியாகுமரி: மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமண வரவேற்பில் இருந்து மணப்பெண் பாதியிலேயே ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ள சுருளோடு பகுதியை சேர்நதவர் ராஜ்குமார்.இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர் பெண் பார்க்க துவங்கினர். கேரள மாநிலம் உற்றங்கரை பகுதியை சேர்ந்த ஷீஜா என்ற பெண்ணை பேசி முடித்தனர். அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து ராஜ்குமாரும், ஷீஜாவும் செல்போனில் பேசிக் கொண்டனர். பெற்றோர் திருமண தேதியையும் குறித்தனர். இதன்படி திருமணம் பிப் 4ம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே திருமணத்திற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் ராஜ்குமார் சொந்த ஊர் வந்தார். முறைப்படியான நிச்சயம் நடைபெற்றது. நிச்சயிக்கப்பட்டவாறு பிப்ரவரி 4ம் தேதி கேரள மாநிலம் உற்றக்கடை பகுதியில் உள்ள சர்ச்சில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அன்று மாலை சுருளோட்டில் உள்ள சமூக நலக்கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
வரவேற்பு விருந்தில் ஊர்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உற்றக்கடை பகுதியில் இருந்து ஷீஜாவின் உறவினர்கள் சீர்வரிசையுடன் வந்தனர். அவர்கள் சீர் பொருட்களை வழங்கிவிட்டு திரும்பி சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ராஜ்குமாரின் நண்பர்கள் அவருடன் நின்று போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் ஷீஜா அவரிடம் கூறி விட்டு நைசாக பஸ் நிலையம் நோக்கி ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்ணை காணாமல் உறவினர்கள் அங்கும் இங்கும் தேடினர். இந்நிலையில் ஒரு பெண் மணக்கோலத்தில் நகைகளை போட்டு கொண்டு ஓடுவதாக வந்த தகவலைஅடுத்து மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை துரத்தி கொண்டு போய் பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறினார். இதையடுத்து இருவருது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
திருமணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.