திறந்த வெளியில் 'கோலாட்டம்' ஆடி நடிகைகள் பயிற்சி எடுத்த தெரு எங்கிருக்கிறது தெரியுமா...?
சென்னை: சென்னையில் ஒரு காலத்தில் நடிகைகள் திறந்தவெளியில் கோலாட்டம் ஆடி பயிற்சி எடுத்த தெரு இன்று மகா பிசியான மாநகர தெருக்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.. ஆனால் இதன் பெயர்தான் அந்தத் தெருவாசிகளை நெளிய வைக்கிறது.
அம்மாப்பேட்டை, முத்துப்பேட்டை, முத்தியால்பேட்டை என்று எத்தனையோ பேட்டைகளைப் பார்த்திருப்போம்.. ஆனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தெருவின் பெயர் கொலைகாரன் பேட்டை. இதுதான் அந்தத் தெருவாசிகளுக்கு ரொம்ப சங்கட்ட்ட்டமாக இருக்கிறதாம்.
கொலைகாரன்பேட்டையில்தான் எனது வீடு உள்ளது என்று நாலு பேரிடம் சொல்லவே தயங்குகிறார்களாம். யாருக்காவது அட்ரஸ் கொடுப்பதாக இருந்தாலும் ரொம்ப சங்கோஜமாக இருக்கிறதாம். தெருப் பெயரைக் கேட்டதுமே பார்ப்பவர்கள் ஒருமாதிரியாக சிரிக்கிறார்களாம்.
கொலைகாரன்பேட்டைக்கு மொத்தம் 2 தெரு உள்ளது. இந்த இரண்டு தெருக்களிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் சார்பில் தெருப் பெயரை மாற்றுமாறு மாநகராட்சிக்கு பலமுறை கோரிக்கை விடுத்து விட்டனர். ஆனாலும் இன்னும் பெயர் மாறவில்லை.
மாநகராட்சித் தரப்பில் கேட்டால், சென்னையில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கும். எனவே இப்படிப்பட்ட நிலையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்தப் பெயரை மாற்ற முடியாது என்று கூறுகிறார்களாம்.
சரி எப்படி கொலைகாரன் பேட்டை என்று இதற்குப் பெயர் வந்தது என்று இப்பகுதியினரிடம் கேட்டால்யாருக்குமே அதுகுறித்த சரியான தகவல் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒரு விதமான தகவலைச் சொல்கிறார்கள்.
அதேசமயம் அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள் சிலர் கூறுகையில், அக்காலத்தில் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் இந்த பகுதியில்தான், திறந்த வெளியில் கோலாட்டம் ஆடி பயிற்சி பெறுவார்கள். எனவே இது கோலாட்டப் பேட்டை என்று பெயர் வந்து பின்னர் மருவி கொலைகாரன் பேட்டையாகியிருக்கலாம் என்று உத்தேசமாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications