விரைவில் ரயில் கட்டணம் மீண்டும் உயர்வு?

ரயில்வே துறை 10 ஆண்டுகள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி தான் ரயில் கட்டணத்தை உயர்த்தியது. இந்நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏசி 3-டயர், சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் வகுக்களின் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாம்.
வரும் 15ம் தேதி நடக்கும் ஜெனரல் மேனேஜர்களின் கூட்டத்தின்போது கட்டண உயர்வு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் இறுதி முடிவு எடுக்க உள்ளாராம்.
அவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்டால் சாதாரண 2ம் வகுப்பு(சபர்பன்) ரயில்களுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயரும் என்று தெரிகிறது. 2ம் வகுப்பு மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசாவும், ஸ்லீப்பர் வகுப்புக்கு 6 பைசாவும் உயர்த்தப்படுமாம்.
மேலும் ஏசி சேர் கார் மற்றும் ஏசி 3 டயரில் பயணிக்க கிலோ மீட்டருக்கு கூடுதலாக 10 பைசா கொடுக்க வேண்டி வரலாம். இது தவிர ஏசி 2 டயர் வகுப்புக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 6 பைசாவும், ஏசி முதல் வகுப்புக்கான கட்டணம் 10 பைசாவும் அதிகரிக்கலாம்.
வரும் 26ம் தேதி நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் கட்டண உயர்வு குறித்த பேச்சு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பவன் குமார் பன்சால், ரயில் கட்டணம் உயரும் என்று சூசமாகத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கட்டணத்தை உயர்த்தியபோது ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இருக்காது என்று அவர் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications