இந்த ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு முழுமையாக நீங்கிவிடும்: ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து அவர் ஆற்றிய பதிலுரையில் கூறியதாவது:
எனது 2001-2006 வரையிலான ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. வடசென்னை, வல்லூர், தூத்துக்குடி, குந்தா, வழுதூர் மின் திட்டங்கள் என 3095 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான புதிய திட்டங்கள் எனது ஆட்சியில்தான் தொடங்கப்பட்டன. இவற்றை தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி இருந்தால் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்காது. எனவே இப்போதைய மின் பற்றாக்குறைக்கு தி.மு.க. அரசே முழு காரணமாகும்.
கிடைக்கப் போகும் மின்சாரம்
கடந்த ஆண்டு மின் நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தேன். வட சென்னை அனல்மின் திட்டத்தில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும். வடசென்னை அனல்மின் நிலைய 2-வது பிரிவில் தற்போது 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் முதல் 600 மெகாவாட் மின்சாரம் அங்கு கிடைக்க உள்ளது. மேட்டூரில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகளை விரைவு படுத்தியதால், கடந்த டிசம்பரில் பணிகள் முடிந்தது. அங்கு 608 மெகாவாட் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
வல்லூரில் முதல் பிரிவு கடந்த டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 375 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. வல்லூர் 2-வது பிரிவில் மின்உற்பத்தி அடுத்த மாதத்திலும் 3-வது பிரிவில் அக்டோபரிலும் செயல்பாட்டுக்கு வரும். இதில் இருந்து 750 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தூத்துக்குடி அனல்மின் திட்டம் மூலம் 377 மெகாவாட் மின்சாரம் வருகிற டிசம்பர் மாதம் முதல் கிடைக்கும். அனல்மின் நிலையங்கள் மூலம் 3312 மெகாவாட் மின்சாரமும் வல்லூரின் திட்டம் மூலம் 375 மெகாவாட்டும் தற்போது கிடைக்கிறது. 2175 மெகாவாட் மின்சாரம் ஜூன் மாதம் கிடைத்து விடும். எஞ்சிய 762 மொகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்.
வெளிமாநில மின்சாரம்
இதுதவிர கூடங்குளம், நெய்வேலி-2 மின்சார திட்டங்கள் மூலமும் மின்சாரம் கிடைக்கும். மேலும் தனியார் மூலமாக 900 மெகாவாட் கிடைக்க வாய்ப்புள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து 3 ஆண்டு கால ஒப்பந்தப்படி 500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும். இத்தகைய நடவடிக்கைகளால் மின் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக நீக்கப்படும்.
சட்டம்-ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு 118 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆதாய கொலை 153 நடந்தது. 1817 கொள்ளைகளும், 4215 கள்ளக் களவுகளும் நடந்தன. கடந்த 20 மாதத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லாமல் அமைதி நிலவுகிறது. நில அபகரிப்பு வழக்குகளில் 28.1.13 வரை பொது மக்களிடம் இருந்து 53 ஆயிரத்து 777 புகார்கள் செய்துள்ளன. இதில் 1943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 1137 கோடி மதிப்புள்ள 2711 ஏக்கர் நிலம், 10,448 சதுர அடி வீடு மனைகளும் மீட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications