அப்சல்குரு விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை: மணீஷ் திவாரி
சென்னை: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதில் எந்த ஒரு அரசியலும் இல்லை என்று மத்திய அமைச்சர் மணீஷ்திவாரி கூறியுள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு 5 ஆண்டுகளையும் உறுதியாக பூர்த்தி செய்யும். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல்குரு மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது அல்ல. சட்டத்துக்கு உட்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு கிடைத்த பிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதி காக்க வேண்டும்.
அரசின் கேபிள் டி.வி.க்கு மத்திய அரசு தடை எதுவும் விதிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டிராய் அமைப்பின் பரிந்துரைப்படி தகவல் ஒளிபரப்பு துறை அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனை நிறுத்தி வைத்தது. அமைச்சக நிலைக்குழு விவாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவினரின் மறு ஆய்வும் செய்யப்பட்டு விட்டது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
இதே கருத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜயசிங்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.