ஸ்டாலினை பெரிதும் மதிக்கிறேன்.. என் வழி, கருணாநிதி வழிதான்! - குஷ்பு விளக்கம்
ஆனந்த விகடன் பேட்டியில், திமுகவின் அடுத்த தலைவராக முக ஸ்டாலினை முன்மொழிவேன் என்று கட்சித் தலைவர் கருணாநிதி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, அதை பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று கூறியிருந்தார்.
நடிகை குஷ்புவின் இந்த கருத்து மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் விளைவு, சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீட்டை தி.மு.க.வினர் சிலர் கல்வீசி தாக்கினார்கள். மேலும், அப்போது திருச்சியில் இருந்த நடிகை குஷ்பு மீது தி.மு.க.வினர் சிலர் செருப்பு வீசி தாக்கினார்கள். இதனால் குஷ்பு அதிர்ச்சியடைந்தார்.
அவர் விளக்கம் அளிக்க முயன்றும், யாரும் அவரது விளக்கத்தை கேட்காமல் சென்றுவிட்டனர். இந்த நிலையில், வாரப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டிகுறித்து, நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றும், குடும்ப ஆதிக்கம் பெருகி விட்டது என்றும், தொடர்ந்து கட்சிக்கு எதிராக கருத்துக்களை பல்வேறு செய்தி ஊடகங்கள் பரப்பி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு இந்தக் குற்றச்சாட்டை மறுத்து நான் அளித்த பதிலை அந்த வார இதழ் வெளியிட்ட முறையில் கட்சி தோழர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
என் வழி, தலைவர் வழிதான் என்பதை எப்போதும் கூறி வருகிறேன். தலைவர் முன்மொழிவதை எப்போதும் நான் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதை என்னுடைய கடமையாக கொண்டுள்ளேன். என் வீட்டில் தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் போட்டோ மட்டும்தான் உள்ளது.
நான் மு.க.ஸ்டாலினை பெரிதும் மதிப்பவள். அப்படியிருக்கும்போது, நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறாக புரிந்துகொண்டு, என் மீது திருச்சியில் தாக்குதல் நடத்தியது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.