மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் திடீர் கோளாறு- உற்பத்தி நிறுத்தம்!
மேட்டூர்: மேட்டூரில் புதிதாக அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.
மேட்டூரில் ரூ3 ஆயிரம் கோடி செலவில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. மொத்தம் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இம் மின் நிலையத்தில் கடந்த 7-ந்தேதி 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது 380 மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் மின் உற்பத்தி நிலையத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டது.
இதனால் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஆயில் கசிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த பின்னரே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி. நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீர் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அணையில் இருந்து நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.