'மவுனி அமாவாசை'.... கும்பமேளாவில் திரண்ட 3 கோடி பக்தர்கள்!
அலகாபாத்: 'மவுனி' அமாவாசை நாளை முன்னிட்டு அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 3 கோடி பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
அலகாபாத்தில் மகா சங்கராந்தி நாளான ஜனவரி 14-ந் தேதியன்று கும்பமேளா தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட புனித நாட்களில் சாதுக்களும் பக்தர்களும் பெருமளவில் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இன்று மவுனி அமாவாசை நாள் என்பதால் சுமார் 3 கோடி பேர் கும்பமேளாவில் குவிந்து புனித நீராடினர். பக்தர்களுக்கு முன்பாக 'அகாடா' சாதுக்கள் புனித நீராடினர். அவர்கள் சரணகோஷங்களை எழுப்பியபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடினர்.

நிர்வாண சாதுக்கள்
நிர்வாண சாதுக்களான நாகா சாதுக்களும் இன்று கும்பமேளாவில் பெருமளவு திரண்டிருந்தனர்.

அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்
அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். 55 நாள் மகா கும்பமேளா விழாவின் மிக முக்கிய நாள் இது என்பதால் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

கடும் குளிரில் நீராடினர்
உடலையே உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவினாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் வெற்று உடம்புடன் பக்தர்கள் கங்கையில் முழுக்குப் போட்டு புனித நீராடினர்.

முக்கியத்துவம் ஏன்
மெளனி அமாவாசை தினத்தன்றுதான் உலகம் உருவானதாக ஒரு புராணக்கதை உள்ளது. எனவேதான் இந்த நாளில் புனித நீராடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

3 கோடி பேர்
இன்று காலையில் மட்டும் கிட்டத்தட்ட 20லட்சம் பேர் புனித நீராடியதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இது போகப் போக பல்கிகப் பெருகி கிட்டத்தட்ட 3 கோடி பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த பாதுகாப்பு
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நிலையில் கும்பமேளாவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 10-ந் தேதி மகாசிவராத்தி நாள் வரை கும்பமேளா நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications