செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடித்துக் கொண்ட அதிமுகவினர்
நெல்லை: அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுனில் உள்ள பழைய சினிமா தியேட்டரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கதர் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சுதா பரமசிவம், வாரியத் தலைவர் முருகையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தற்போதைய மாவட்டச் செயலாளர் சுதா பரமசிவம் ஆகியோர் தலைமையில் 3 கோஷ்டிகளாக உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் சப்பாணிமுத்து என்பவர் பேசினார். அப்போது அவர் கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சக நிர்வாகிகள் அவரை பேசவிடாமல் இடைமறித்தனர். இதனால் கலகலப்பு ஏற்பட்டு பின்னர் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளைத் தூக்கி வீசி தாக்கினர். இந்த ரகளையைப் பார்த்து அமைச்சர் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றார்.












Click it and Unblock the Notifications